தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்து உள்ளார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘சுபம்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, மேடையில் கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதைப் போலவே, சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் நின்றபோது சமந்தாவின் கண்கள் கலங்குவது ரசிகர்களிடையே கவலையும் வதந்திகளையும் உருவாக்கியது.
இந்தக் கருத்துகளை முறியடித்து சமந்தா விளக்கமளித்துள்ளார் :
“நான் மேடையில் அடிக்கடி கண்கள் கலங்குவது உணர்ச்சிவசப்பட்டு அல்ல. பிரகாசமான விளக்குகள் என் கண்களுக்கு கூசுவதாகத் தெரிகிறது. எனது கண்கள் மிகவும் சென்சிடிவ். அதனால்தான் எனக்கு இயற்கையாகவே கண்ணீர் வருகிறது. இது ஒரு உடலியல் பிரச்சனைதான். நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என கூறினார்.
மேடைகளில் நின்று கண்ணீர் வடிப்பதாக பலர் பரப்பும் வதந்திகளை முற்றுப்புள்ளி வைத்து, தனது உடல்நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ள சமந்தா, ரசிகர்களின் கவலையையும் சந்தேகத்தையும் நீக்கியுள்ளார்.