சென்னை:
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இளைஞர்கள் குறித்து முக்கியமான பார்வையை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், “இன்றைய செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாசாரம் மற்றும் அதன் பெருமைகள் குறித்து அறியாமல், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள். நம் நாட்டின் பண்பாட்டையும், சம்பிரதாயத்தையும் அறிந்து, அதை பின்பற்றும் பொறுப்பு இளைஞர்களின் மீது உள்ளது” என்றார்.
மேலும், “மேற்கத்திய நாடுகளின் மக்கள் தங்களது கலாசாரத்தில் நிம்மதி இல்லாமல் இந்தியா வந்துவிடுகிறார்கள். யோகா போன்ற பாரம்பரிய வாழ்வியல் முறைகளை நாடி வருகின்றனர். இது நமது கலாசாரத்தின் மகத்துவத்தைக் காட்டுகிறது. எனவே, இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாரதத்தின் பெருமைகளை எடுத்துச் செல்ல வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
தற்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்திலும், நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.