மதுரை மேற்கு தொகுதியில் உள்ள பைக்காரா பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டவுள்ள புதிய நியாய விலை கடைக்கான பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கலந்து கொண்டு பூஜையை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை புகழ்ந்தார்.
“மோடி எடுத்தது நேரடி நடவடிக்கை”
“உலகளவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். எந்த நாட்டிலும் அது இருப்பது பொருந்தாது. இந்த எண்ணத்தோடு, எந்த ஒரு பிரதமரும் எடுக்காத ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளார் நம் பிரதமர் மோடி. இது தான் ‘சாட்டையை சுழைத்தல்’. இந்தியாவின் முன்னெடுப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
“தமிழ் மீதான மரியாதை எங்கே ?”
திமுக ஆட்சியின்போது, அரசுப் பள்ளிகளில் தமிழில் பயிற்சி வழங்க வேண்டிய கட்டாயம் பின்பற்றப்படவில்லை எனவும், “முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழுக்கே இடமில்லை” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமலாக்கத்துறை நடவடிக்கையும், மக்களின் ஏமாற்றமும்
“திமுக அரசு மக்களுக்குச் சாதனை அல்ல, வேதனை. இன்று பல திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நீதிமன்றம் கூட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மின் கட்டணம் உயர்வு, கரண்ட் கட் என பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்” என்றார்.
சித்திரைத் திருவிழா பாதுகாப்பில் ஐயப்பாடுகள்
“மதுரையின் சித்திரைத் திருவிழா, மக்கள் விழாவாக இல்லாமல், சிலருக்கே மையமாக நடக்கிறது. எங்கள் ஆட்சி காலத்தில் எந்தவொரு துயரச் சம்பவமும் நிகழவில்லை. தற்போது ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால், முழுப்பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் உண்டு” என்று அவர் எச்சரித்தார்.
“2026ல் ஆட்சி மாற்றம் உறுதி”
“தினமும் சேவல் கூவுவது போல முதலமைச்சரும் திமுக வெற்றி பெறும் என கூவுகிறார். ஆனால் மக்கள் விருப்பம் வேறு வழியில் செல்கிறது. அமைச்சர் பொன்முடி ‘ஓசி ஓசி’ என்று பேசிய போதே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி மாதிரியாகத் திடமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என கடுமையாக விமர்சித்தார்.