ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இன்று அதிகாலை இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது.
இந்தியா தாக்கிய 9 பயங்கரவாத முகாம்களும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்தன. ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் தலைமையகங்கள், பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
தாக்குதலின் முக்கிய விவரங்கள்:
தாக்குதல் நேரம்: அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை (25 நிமிடங்கள்)
ஏவுகணைகள்: 24
உயிரிழந்தவர்கள்: 70 பேர்
காயமடைந்தவர்கள்: 60 பேர்
அழிக்கப்பட்ட 9 முக்கிய முகாம்கள்:
- மர்காஸ் அப்பாஸ் முகாம் (கோட்லி, PoK) – லஷ்கர் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை பயிற்சி முகாம்.
- குல்பூர் முகாம் (கோட்லி, PoK) – பூஞ்ச் மற்றும் யாத்ரீகர் பேருந்து தாக்குதலுக்குப் பின்னணி.
- சர்ஜால் முகாம் (சியால்கோட், பாகிஸ்தான்) – ஜம்மு-காஷ்மீர் காவலர்களை கொன்ற பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்.
- முரிட்கே தலைமையகம் (பாகிஸ்தான்) – 2008 மும்பை தாக்குதல் குற்றவாளிகள் பயிற்சி பெற்ற இடம்.
- பஹவல்பூர் தலைமையகம் (பாகிஸ்தான்) – ஜெய்ஷ் தலைவர் மசூத் அசார் தலைமையகம்.
- மஹ்மூனா ஜெயா முகாம் (சியால்கோட், பாகிஸ்தான்) – ஹிஸ்புல் முஜாஹிதீனின் கட்டுப்பாட்டு மையம்.
- சவாய் நாலா முகாம் (முசாபராபாத், PoK) – லஷ்கரின் முக்கிய பயிற்சி முகாம்.
- சையத்னா பெலால் முகாம் (முசாபராபாத், PoK) – ஆயுத மற்றும் உயிர்வாழ்வு பயிற்சி முகாம்.
- பர்னாலா முகாம் (பிம்பர், PoK) – IED மற்றும் காடுகளில் பயிற்சி வழங்கும் முகாம்.
இந்தத் தாக்குதலின் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட, நேர்த்தியான தாக்குதலாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்த முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.