சென்னை: மத்திய பட்ஜெட்டின் அடிப்படையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் வெளியாகியுள்ளது.
ரூ.63,246 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட வேலைகள், மொத்தம் 116.1 கிலோமீட்டர் தூரத்தில் மூன்று முக்கிய வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கு, 2025-26 நிதியாண்டுக்காக இவ்விதமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற நகரங்களின் மெட்ரோ திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது: டெல்லி மெட்ரோ திட்டத்திற்கு ரூ.5,434.72 கோடி, பாட்னா மெட்ரோ திட்டத்திற்கு ரூ.3,165.19 கோடி, பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,217 கோடி, மும்பை உள்ளிட்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் நான்கு மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.4,836 கோடி மொத்தமாக, 10 மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.31,755.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:
“மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.8,445 கோடி ஒதுக்கீடு, நாட்டின் மெட்ரோ திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 26.6% ஆகும். டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் முக்கியமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கோவை, மதுரை, விமான நிலையம்–கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் வழங்கி, தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.