தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது
நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு – நீதிமன்ற உத்தரவால் போலீஸ் நடவடிக்கை.
மயிலாடுதுறை அருகே கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவர், மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் உள்ள ஆர்விகா என்ற நகைக்கடையில் சிறுகச் சிறுக ரூ.7.90 லட்சம் பணம் செலுத்தி 10 சவரன் நகைகளை தவனைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் ஒரு நகையை தனது உறவினரின் விசேஷ நிகழ்ச்சிக்காக கொடுக்கும் பொழுது அந்த நகை போலியானது என தெரியவந்ததைத் தொடர்ந்து, ராஜாத்தி நகைகளை சோதனை செய்தபோது 11 டச் மட்டுமே இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நகைகளை வாங்கிக் கொடுத்த ஏஜென்ட்களுடன் நகைக்கடைக்குச் சென்று நகைக்கான ரசீதை கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் ரசீது தரவும் மறுத்ததுடன், இந்தப் பிரச்சினையை விடாவிட்டால் விபரீதம் ஏற்படும் என மிரட்டியதாகவும் ராஜாத்தி புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராஜாத்தி மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், நகைக்கடை உரிமையாளர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ், ஏஜென்ட்களாக செயல்பட்ட 2 பெண்கள் என 3 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஷங்கமித்திரன் கூறுகையில், ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். போலி நகைகளை விற்ற நிறுவனத்தினரை கைது செய்து, ஏமாற்றப்பட்ட நகைகளுக்கு பதிலாக 22 கேரட் தங்க நகைகளை போலீசார் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.












