மயிலாடுதுறையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு :-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், தேர்தலில் 100% வாக்களிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நான் நிச்சயம் வாக்களிப்பேன் என்ற வாசகத்துடன் கூடிய கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பூங்கொடி துவக்கி வைத்தார். தொடர்ந்து தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை அவர் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியபடி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக தேர்தல் விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாரன், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

















