மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு. நோயாளிக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் மருத்துவர் கையொப்பம் ஏன் போடவில்லை என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்:-
தமிழக அரசு சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் முதல் முறையாக பொறுப்பு அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறைக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நேற்று நள்ளிரவு கூறைவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க முற்பட்டு தீயணைப்பு வீரர் ஹரிஹரன் என்பவர் தீக்காயம் அடைந்து சிகிச்சையில் இருந்தவரை அமைச்சர் சந்தித்து அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து நோயாளிகளிடம் சிகிச்சை நன்றாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்த முதியவர்களிடம் சென்று அருகில் சென்று என்ன பிரச்சனைக்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டறிந்தார். அறுவை சிகிச்சை செய்த ராஜசுந்தரி என்பவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையை வாங்கிப் பார்த்த அமைச்சர் மருத்துவ அறிக்கையில் மருத்துவர் கையொப்பம் ஏன் போடவில்லை என்று கேள்வி எழுப்பி மருத்துவ அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். தொடர்ந்து நோயாளிகள் உள்ள வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.














