கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை. 1008 பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கிற்கு குங்குமம் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வழிபாடு:-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காமாட்சி அம்மன் உற்சவமூர்த்தி ஆலய மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. அம்மனாக பாவித்து திருவிளக்கு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1008 பெண்கள் பங்கேற்று குத்து விளக்குகள் வைத்து பூஜை செய்தனர். ஊர் செழிக்கவும், மாங்கல்யம் பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம், மற்றும் உலக நன்மை வேண்டி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களுக்கு ஏற்ப குங்குமம் மற்றும் புஷ்பங்களால் குத்துவிளக்கிற்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து குத்துவிளக்கு தீபம் காட்டி லலிதா சகஸ்ரநாம பூஜை செய்து நிறைவாக பூஜை செய்யப்பட்ட குத்துவிளக்குடன் கருவறையில் உள்ள காமாட்சி அம்மனை வணங்கி வழிபாடு செய்தனர். மகா சதாசிவ பீடாதிபதி சாமிநாத சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியை டெக்கான் மூர்த்தி தலைமையில் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.












