அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
அரசுப் பணிக்காகச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2,000-க்கும் மேற்பட்ட ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள பில்லூர் பகுதியைச் சேர்ந்த சுமதி, மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமதி தனது இருசக்கர வாகனத்தில், தன்னுடன் பணியாற்றிய லட்சுமியுடன் சென்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற லட்சுமி படுகாயமடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசுப் பணிக்காகச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த சுமதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பணியாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு, காப்பீடு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று திருவாரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட
ஆட்சியர் மோகனசந்திரனிடம் 2,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மனு அளித்தனர். அதில், உயிரிழந்த வட்டார ஒருங்கிணைப்பாளரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட பணியாளர்கள், உயிரிழந்த சுமதிக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜபிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்த சுமதி, உயிரிழக்கும் தருவாயிலும் அரசுப் பணிக்காகவே சென்று கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு இதுவரை ஈமச்சடங்கு நிதி கூட வழங்கப்படவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 14 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் யாருக்கும் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும், காப்பீடு வழங்க வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எங்களுடன் பணியாற்றிய சகோதரியின் இழப்பு எங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. பணியாளர்கள் அனைவரும் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.
இழப்பீடு தொடர்பாக மாநில இயக்க மேலாண்மை இயக்குநருடன் பேசி பதில் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இழப்பீடு வழங்கப்படும் என இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
உரிய இழப்பீடு வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என அவர் தெரிவித்தார்.












