பெங்களூரு : 18வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களின் கனவு நனவாகி, வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சிகள் பெருமிதத்தை ஏற்படுத்தின.
இதற்காக ஜூன் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், RCB அணியினருக்காக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவுக்கு முன்னதாக வீரர்கள் திறந்தவெளிப் பேருந்தில் திருவிழா போன்று வரவேற்கப்பட்டனர்.
ஆனால் இந்த பாராட்டின் பின்னணி கோர திருப்பத்தை எடுத்தது. வீரர்களை பாராட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானம் அருகே திரண்டனர். குறிப்பாக கேட் எண் 6 பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்து, 56 பேர் படுகாயம் அடைந்தனர். இது ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. நீதிபதி காமேஷ்வர ராவ் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், அரசுத் தரப்பில்:
விழா பாதுகாப்புக்காக 1,600 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர், 2.5 லட்சம் பேர் வருகைதந்தனர், மைதானத்தில் 34,600 பேர் மட்டுமே அமர முடியும், 15 நாட்களில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது, மொத்தம் 21 நுழைவு வாயில்கள் இருந்தன. ஆனால் கேட் எண் 6, 7, 8 பகுதியில் மட்டும் நெரிசல் அதிகமாக இருந்தது என்ற தகவல்கள் பகிரப்பட்டன.
இதையடுத்து நீதிபதி கேள்விகள் எழுப்பினார் :
இந்த நிகழ்ச்சியை யார் நடத்தினர் ? அரசு ? கிரிக்கெட் சங்கம் ?
ஒரே நாளில் ‘விதான் சவுதா பேரணி’ மற்றும் ‘சின்னசாமி பாராட்டு விழா’ என்பவற்றை ஏன் ஒரே நேரத்தில் நடத்தினர் ?
பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுத்திருந்தார்களா ?
இதற்கான பதில்களை பெங்களூரு ஆட்சியர், ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம் ஜூன் 10ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.