பெங்களூரு :
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று, 17 ஆண்டுகளாக எதிர்பார்த்த கனவினை நனவாக்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் வகையில், ரசிகர்களும், வீரர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
வெற்றியின் ஒரு பகுதியாக, RCB வீரர்கள் திறந்தவெளிப் பேருந்தில் வெற்றி பேரணியை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். விதான சவுதாவிலிருந்து தொடங்கி, சின்னசாமி மைதானத்தில் நிறைவடையும் வகையில் பேரணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சின்னசாமி மைதானம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர்.
இந்த சூழலில், கேட்-6 பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 ரசிகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் பேரிகார்டு விழுந்ததில், மூவரின் கால்கள் முறிந்துள்ளன. சூழ்நிலை கட்டுப்பாட்டுக்கு வர போலீசார் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தக் கொண்டாட்டம், சோகத்தில் மாறியுள்ள சூழ்நிலை, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.