விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும், அரசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 28ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி,நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அறிவிப்பு..
திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ், விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது…
தவெக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி சிறு குறு விவசாயிகளுக்கு முழு பயிர் கடனை தள்ளுபடி செய்யவும், பெரு விவசாயிகளுக்கு பகுதி அளவு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15000 ரூபாய் வழங்க வேண்டும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், மேகதாது அணையை கட்டுவதை தடுக்க வேண்டும், குடிப்பதற்காக மேட்டூர் அணை தண்ணீரை திறக்க வேண்டும், ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு போக்க வேண்டும், அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரேஷன் கடையில் தரமான அரிசி கொடுப்பதாக சட்டமன்றத்தில் கூறினாலும், தரமான அரிசி பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை, நகரம் மற்றும் கிராமங்களில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க வேண்டும். நபர் ஒன்றுக்கு 40 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் என சட்டம் இருந்த நிலையிலும் இதுவரை பொதுமக்களுக்கு அவ்வாறு கிடைக்கவில்லை. பொதுமக்கள் கிராமம் விட்டு கிராமம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். மின் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், மின்சார வாரியம் நகரம் கிராமம் என்று பிரித்து பார்க்காமல், அனைத்து பகுதிகளுக்கும் முறையான மின்சாரத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து வருகிற 28ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகை மற்றும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
அரசுக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியே அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து கேட்டபோது..
அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்பது என்பது வேறு. இது இடைகாலத்தில் வந்திருக்கிற அரசு. இந்த அரசுக்கு இடதுசாரிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறது ஜனநாயக பாதுகாப்பிற்காக தான். ஆனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து போராடிக் கொண்டிருப்பது வழக்கம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் கட்சியில் இடம்பெறவில்லை. நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம். அரசிடம் நாங்கள் கோரிக்கை வைப்போம், அவர்கள் கேட்கலாம். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
பேட்டி : கோ பழனிச்சாமி முன்னாள் எம்எல்ஏ












