மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகம்மது யூனூஸ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மாவட்டத்தின் தனித்துவமான வளங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மக்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்ய அரசு அலுவலர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இயற்கை பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் ஆணைகள், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகைகள் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கூடுதல் ஆட்சியர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.














