மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 9-ஆம் தேதி தொடங்கி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 9-ஆம் தேதிமுதல் அவ்வப்போது மிகமிதமான சாரல் மழை மட்டுமே பெய்துவந்த நிலையில், நேற்று காலை மிதமாக தொடங்கி மழை, மதியத்துக்கு மேல் பலத்த மழையாக பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 6 மணி வரை சராசரியாக 68 மி.மீட்டர் மழை பதிவானது. இதில், அதிகபட்சமாக சீர்காழியில் 77 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதன்பின்னரும் மழை தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த மழை நீடிக்கும்பட்சத்தில் சம்பா பயிர்கள் பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் பதராக மாறிவிடும் அபாயம் உள்ளது. மேலும், மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

















