மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால், ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக காவிரி ஆற்றில் அமைந்துள்ள புஷ்கர தொட்டியில் நகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தெய்வமாக நினைத்து வழிபடும் ஆடிப்பெருக்கு விழா 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றை கன்னிப் பெண்ணாக நினைத்து ஆடிப்பெருக்கு தினத்தன்று பொதுமக்கள் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் காதோலை கருகமணி கண்ணாடி வளையல் நாவல் பழம், பேரிக்காய் விளாங்காய் ஆகியவற்றுடன் அச்சு வெல்லம் காப்பரிசி கலந்து வைத்து ஆற்றங்கரையில் காவிரி மண்ணை பிடித்து தூப தீபங்கள் காட்டி மாங்கல்ய பலம் வேண்டி தாலியை வணங்கி, ஆற்றில் தீபம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாத நிலையில், நதிநீர் ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடகம் காவிரியில் உரிய தண்ணீரை திறக்க மறுக்கிறது, இதனால் மயிலாடுதுறை நகரில் 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள துலா கட்டம் பகுதி வறண்டு காணப்படுகிறது. காவிரி கடலுடன் கலக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆடிப்பெருக்கு கொண்டாட தண்ணீர் வராது என்ற நிலையில், 2017ம் ஆண்டு துலா கட்ட பகுதியில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. தொடர்ந்து மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை புஷ்கர தொட்டியில் நிரப்பும் பணி இன்று துவங்கியது. ஆடிப்பெருக்கில் பக்தர்கள், புஷ்கர தொட்டியில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட உள்ளனர்













