கட்சி நிதி கேட்டு மிரட்டல்: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி மீது தவெக நிர்வாகி தாக்குதல்! – மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரசு அனுமதியுடன் நடைபெற்ற தூர்வாரும் பணியில் கட்சி நிதி கேட்டு மிரட்டியதோடு, அதைத் தட்டிக்கேட்ட திமுக நிர்வாகியைத் தாக்கிய தமிழக வெற்றி கழக ஒன்றிய செயலாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குத்தாலம் தாலுகா, திருமணஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழைய தெரு கிராமத்தில் அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த தவேக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் என்பவர், தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களிடம் கட்சி நிதிக்காக பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு ரூ.5,000 கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.15,000 தர வேண்டும் எனக்கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆலங்குடி பஞ்சாயத்து நாகமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற வயல் தூர்வாரும் பணியின்போதும், ராஜ்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரச்சனை செய்துள்ளார். “பணம் தரவில்லை என்றால் வேலையை நடக்க விடமாட்டோம்” எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் பாண்டியன் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து, “எங்கள் ஊரில் அரசு அனுமதியுடன் பணி நடக்கும் போது உனக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?” என நியாயம் கேட்டுள்ளார்.
இதனால் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ராஜ்குமாருடன் வந்த நபர்கள் பாண்டியனை கொடூரமாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த பாண்டியன் உடனடியாக மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தங்கள் மீதான தவறை மறைப்பதற்காக தவெக நிர்வாகிகள் காவல்துறையில் பொய் புகார் அளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து குத்தாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













