கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது.
சென்னை,கொளத்தூர் அன்னை சத்யா நகர், பிள்ளையார் கோவில் தெரு ஓடைப்பகுதியில் வசித்து வருபவர் சரண்ராஜ் (வயது 36) இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் திருப்பதி நகரில் உள்ள மாவு கம்பெனியில் வேலை செய்து வந்த முத்துமாரியம்மாள் வயது 38 )என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முத்துமாரியம்மாளுக்கு ஏற்கனவே முருகன் என்பவருடன் திருமணமாகி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் உள்ளனர் மூன்று பேரும் தற்போது பல்லாவரத்தில் உள்ள தந்தை முருகனிடம் வசித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் , காதல் திருமணம் செய்து கொண்ட சரண்ராஜ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடி போதைக்கு அடிமையாகி வீட்டிலேயே அடைப்பட்டுகிடந்தார்.
இதன் காரணமாக கணவன், மனைவிக்கு அடிக்கடி சண்டை மூண்டது. நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சரண்ராஜ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ் வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் முத்துமாரியம்மாளை வலது மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
உடனே, சரண்ராஜ் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர், ஆம்புலன்ஸ் செவிலியர்கள் வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. அப்போது தனது மனைவி கீழே விழுந்து இறந்து விட்டார் என சரண்ராஜ் நாடகமாடியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து , குடிபோதையில் இருந்த கொலையாளி சரண்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடி போதையில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














