செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கிய இருவர் கைது. 3இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சுற்றுப்பகுதிகளில் அண்மை காலமாக இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில், ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் சரக காவல் மாவட்ட உதவி ஆணையாளர் பிராங்கிளின் ரூபன் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரிபூரணம் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பவங்கள் நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு,
ஆய்வு செய்து குற்றப் பின்னணி கொண்ட நபரின் செல்போன் டவரை ஆய்வு செய்ததில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பாண்டிச்சேரியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் பாண்டிச்சேரி சென்று, அங்கிருந்த குற்றவாளிகள் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள், செங்குன்றம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (20) அவருடைய கூட்டாளி போரூரை சேர்ந்த விக்னேஷ் ( 25) என்பதும், தெரிய வந்தது.
பின்னர் இவர்கள் இருவரின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் மீது இது போன்ற குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.














