சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அமெரிக்க வர்த்தகக் கொள்கை முதல் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படச் சிக்கல் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்துத் தனது பாணியில் அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா மீது 500 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியிருப்பது ஒரு வகை மிரட்டல் மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், ஏற்கனவே வரி உயர்த்தப்பட்ட போதே இந்தியாவின் ஏற்றுமதி குறையவில்லை என்பதையும், அத்தகைய வரி உயர்வால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதால் அங்கேயே எதிர்ப்பு கிளம்பும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கைச் சான்று விவகாரம் குறித்துப் பேசிய ஹெச்.ராஜா, “திரைப்படத்தில் விதிமுறைகளை மீறிய காட்சிகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்யச் சொல்வது தணிக்கை குழுவின் இயல்பான நடைமுறை. குறிப்பாக ராணுவம் தொடர்பான காட்சிகள் இருந்தால் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. இதைச் சரி செய்தாலே சான்றிதழ் கிடைத்துவிடும்; இதில் பாஜகவைத் தேவையின்றி இழுக்கக் கூடாது. பாஜகவுக்கும் விஜய்க்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று விளக்கமளித்தார். மேலும், இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் இடங்களைப் பெறத் துடிப்பதாகக் கேலி செய்த அவர், தமிழகத் திரைத்துறை ஆளுங்கட்சியின் முதல் குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சினிமா உலகம் விடுவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மொழிப்போர் மற்றும் திராவிட அரசியல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “இந்தி எதிர்ப்பு என்பது தற்போது செத்துப்போன குதிரை போன்றது. அதைச் சாட்டையால் அடித்து எழுப்ப நினைப்பது வீண் வேலை. இந்தியை எதிர்ப்பவர்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் முன் முதலில் போராட்டம் நடத்தட்டும்” என்று சவால் விடுத்தார். மேலும், ‘பராசக்தி’ என்றாலே தனக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் தான் நினைவுக்கு வரும் என்றும், புதிய பராசக்தி யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆளுங்கட்சியின் தயவின்றித் தமிழகத்தில் படங்களை வெளியிட முடியாத சூழல் நிலவுவதாகவும், சட்டப்படியான தணிக்கை நடைமுறைகளை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் ஹெச்.ராஜா தனது பேட்டியில் வலியுறுத்தினார்.














