நடப்பு ஆண்டின் ஐபிஎல் சீசனில் பேட்டிங்கிற்கு சரிசமமான பலத்துடன் பந்துவீச்சையும் கொண்டுள்ளது ஆர்சிபி அணி. எப்படி பேட்டிங்கில் பிலிப் சால்ட் போனால், விராட் கோலி, ரஜத் பட்டிதார், படிக்கல் என மேட்ச் வின்னர்கள் வந்துகொண்டே இருக்கிறார்களோ, அப்படியே பந்துவீச்சிலும் ஹசல்வுட் போனால், க்ருணால் பாண்டியா, சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார் என அடுத்தடுத்து மீண்டுவந்து சம்பவம் செய்துவருகிறார்கள்.
ஆர்சிபி அணி இதுவரை 5 போட்டிகளில் வரிசையாக வென்றதே இல்லை என்பதை உடைத்திருக்கும் பட்டிதார் படை,சொந்த மண்ணில் 3 தோல்விக்கு பிறகு தரமான கம்பேக் கொடுத்துள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது ஆர்சிபி அணி. தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகளில் வரிசையாக தோற்றபிறகு, ஒருமுறையாவது டாஸ் எங்கள் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும் என விரக்தியான முகத்துடன் கூறினார் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த போட்டியிலும் டாஸை இழந்தார் பட்டிதார்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. பில் சால்ட்டின் விக்கெட்டை தொடக்கத்திலேயே ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கோட்டைவிட, முதல் 6 ஓவரில் 59 ரன்களை அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது ஆர்சிபி அணி. 26 ரன்னில் சால்ட் அவுட்டாகி வெளியேறிய பின், 2- வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் படிக்கல் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஒருபுறம் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என மிரட்டிவிட்ட விராட் கோலி 70 ரன்கள் அடித்து அசத்தினார். மறுமுனையில் 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என வெளுத்துவாங்கிய படிக்கல் 27 பந்தில் அரைசதமடித்தார். டிம் டேவிட் 2 பவுண்டரி 1 சிக்சர் என விளாச, கடைசியாக வந்து 10 ரன்னில் 20 ரன்களை பறக்கவிட்ட ஜிதேஷ் சர்மா ஆர்சிபியை 205 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
வெறித்தனமாக ஆடிய ஜெய்ஸ்வால்..

சேஸிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 206 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி என்ற இரண்டு இளம் வீரர்களும் காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். சிக்சரோ, அவுட்டோ நாங்கள் பேட்டை வீசப்போகிறோம் என விளையாடிய சிறுவர்கள் இருவரும், ஆர்சிபி அணியின் அனுபவம் வாய்ந்த பவுலர்களை பஞ்சராக்கினர். யஷ் தயாள் ஓவரில் 18 ரன்கள், ஹசல்வுட்டுக்கு எதிராக 16 ரன்கள், புவனேஷ்வருக்கு எதிராக 14 மற்றும் ஷெஃபர்ட்டுக்கு எதிராக 16 ரன்கள் என பவர்பிளே மொத்தமும் ரன்மழை பொழிய 9 ஓவரில் 110 ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி. கிட்டத்தட்ட அந்தநேரத்தில் ஆர்சிபியை விட 30 ரன்கள் அதிகமாக அடித்திருந்தது RR அணி.
19 பந்தில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 257 ஸ்டிரைக்ரேட்டில் 49 ரன்கள் அடித்து வெளியேறினார். ஜெய்ஸ்வாலின் அதிரடியால் தேவைப்படும் ரன்ரேட் 8.30ஆக மாற, நிதிஷ் ரானா மற்றும் ரியான் பராக் இருவரும் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என பறக்கவிட்டு அசத்தினர்.
ஆர்சிபிக்கு உயிர்கொடுத்த ஹசல்வுட்..

கடைசி 6 ஓவருக்கு 66 ரன்கள் என ஆட்டம் மாற, ஓவருக்கு ஒரு சிக்சர் அடித்தால் போதும் என சிறந்த கால்குலேஷன் மைண்ட் உடன் பேட்டிங் செய்த ஜுரல், அதை சரியாக டார்கெட் செய்து ஆர்சிபிக்கு தலைவலியை அதிகப்படுத்தினார். முக்கியமான தருணத்தில் ஹெட்மயர் விக்கெட்டை கைப்பற்றி ஆர்சிபி அணி கம்பேக் கொடுத்தாலும், 18வது ஓவரை வீசிய புவனேஷ்குமாருக்கு எதிராக 2 சிக்சர் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்ட துருவ் ஜுரல் ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்து ராஜ்ஸ்தான் அணியின் பக்கம் ஆட்டத்தை எடுத்துவந்தார்.கடைசி 2 ஓவருக்கு வெறும் 18 ரன்களே தேவையென போட்டி மாற, ’ஆர்சிபிக்கு சோலி முடிஞ்சது, சொந்த மண்ணில் 4வது தோல்வி உறுதி’ என்ற மனநிலைக்கே ரசிகர்கள் சென்றனர். அதுவரை ஆர்சிபி, ஆர்சிபி என மைதானத்தில் அதிர்ந்த சத்தம் சைலண்ட் ஆனது. ஆனால் 19வது ஓவரை வீசவந்த ஹசல்வுட் ‘ஒரு மாயாஜால பந்துவீச்சை வெளிப்படுத்தி மீண்டும் ஆர்சிபி என்ற சத்தம் விண்ணை பிளக்க வைத்தார். 3 சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்தும் ஆட்டமாடிய துருவ் ஜுரலை 47 ரன்னில் அவுட்டாக்கிய ஹசல்வுட், அந்த ஒரு ஒவரில் மட்டும் 2 விக்கெட்டுகளுடன் வெறும் 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுக்க ஆர்சிபி அணியின் வெற்றி 19வது ஓவரிலேயே உறுதியானது.
கடைசி 6 பந்துக்கு 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என போட்டி மாற, 6 ரன்களை மட்டுமே அடித்த ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 3வது இதயம் உடைக்கும் தோல்வியை சந்தித்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஹோம் கிரவுண்ட்டில் முதல் வெற்றியை பதிவுசெய்த ஆர்சிபி அணி அசத்தியது.