சென்னை, எண்ணுார் முகத்துவாரத்தை ஒட்டிய கழிமுகம் பரவல் பகுதி முழுதும், மஞ்சள், கறுப்பு நிறமாக மாறி காட்சியளிப்பதால், ரசாயன கழிவு கலப்பு உள்ளதாக, மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே முகத்துவாரம் மஞ்சள் நிறமாக மாறிய விவகாரம், விஸ்வரூபம் எடுக்கவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் முகாமிட்டு, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆனால், முடிவுகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று மதியம் முகத்துவாரம் மற்றும் கழிமுகம் பரவல் முழுதும், மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. சிலர் சட்டவிரோதமாக ரசாயன கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதால், இதுபோன்ற நிறம் மாறுவதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால், மீன்கள் இனப்பெருக்க இடமாக கருதப்படும் முகத்துவாரம் முழுதும் பாழாய் போய்விடும். இனப்பெருக்கம் என்பதே இருக்காது. மீனவர்களின் வாழ்வாதாரமும், அடியோடு பாதிக்கும் என, கவலை தெரிவிக்கின்றனர்.
மவுனம் சாதிக்கும் மாசு கட்டுபாட்டு வாரியம் கவனித்து, நீர்நிலைகளில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுகிறதா? முகத்துவாரத்தில் மீன்வளம் பாதிக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வின் மூலம், மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளது.