2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. கரூர் நகரின் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில், கரூர் மாரியம்மன் மற்றும் ஐயப்பன் கோயில்களில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூலவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரூர் அண்ணா நகர் கற்பக விநாயகர் கோயிலில் மூலவர் ‘தங்க கவச’ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதேபோல் வெண்ணெய்மலை, வேலாயுதம்பாளையம் புகழிமலை, க.பரமத்தி பாலமலை ஆகிய முருகன் கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.
கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டுத் திருநாள் சிறப்பு ஆராதனைகளுடன் களைகட்டியது. கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித குழந்தை தெரசா ஆலயத்தில், நள்ளிரவு 12:00 மணிக்கு பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் அருட்தந்தைகள் விஜய் அமல்தாஸ், பால்ராஜ் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கரூர் சி.எஸ்.ஐ. நகர ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் நேற்று காலை சிறப்புத் திருப்பலி மற்றும் புத்தாண்டுப் பாடல்கள் பாடி மக்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மனோகரா ரவுண்டானாவில் ஒரு நெகிழ்ச்சியான புத்தாண்டு கொண்டாட்டம் அரங்கேறியது. கரூர் மாவட்டக் காவல்துறை சார்பில் ஏ.டி.எஸ்.பி. பிரபாகர் தலைமையில் போலீசார் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். அங்கு திரண்டிருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்குப் போலீசார் கேக் வழங்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இணைந்து கொண்டது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புறநகர்ப் பகுதிகளான லாலாப்பேட்டை செம்போர்ஜோதீஸ்வரர் சிவன் கோயில், சிந்தலவாடி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் அம்மனுக்குச் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் குந்தாணிபாளையம், நொய்யல் செல்லாண்டியம்மன், சேமங்கி மாரியம்மன், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து கிராமப்புற ஆலயங்களிலும் புத்தாண்டுச் சிறப்பு வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை செய்திருந்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளால், புத்தாண்டு கொண்டாட்டங்கள் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நிறைவு பெற்றன.













