புதுடெல்லி: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 9 புதிய வரைவு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், கடனாளிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் விளக்கமான வழிகாட்டுதல்களாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள் இதோ:
- 75% கடன் வரம்பு: இனிமேல், அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்க அனுமதிக்கப்படும். கடந்த காலத்தில், குறிப்பாக கோவிட் காலத்தின்போது, பொதுமக்களுக்கு நிவாரணமாக 80% வரையில் கடன் பெறும் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
- தங்கத்தின் சொந்த உரிமை ஆதாரம் கட்டாயம்: கடன் பெறும் நபர், தங்க நகை தமதுதான் என்பதற்கான தகுந்த ஆதார ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
- தரச் சான்றிதழ் வழங்கல்: வாடிக்கையாளர்களுக்கு, தங்கத்தின் தூய்மையும் தரமும் குறித்த சான்றிதழை வங்கிகள் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- 24 காரட் நகைக்கு 22 காரட் மதிப்பீடு: அடகு வைக்கப்படும் தங்கம் 24 காரட்டாக இருந்தாலும் கூட, அதன் மதிப்பு 22 காரட் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்.
- வெள்ளி நகைக்கும் கடன் சலுகை: புதிய விதிமுறையின் படி, வெள்ளிப்பொருட்களையும் அடகு வைத்து கடன் பெறலாம் என்பது பொதுமக்களுக்கு சிறிய ஆறுதலாக இருக்கிறது.
- ஒரு கிலோ வரையிலான நகை மட்டுமே அடகு: தனிநபர்கள், அதிகபட்சம் 1 கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- அவைசர தேவைகளுக்கு ரசீது கட்டாயம்: கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்காக கடன் பெறும் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கியதற்கான ரசீதை மற்றும் தரச் சான்றை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை, நடைமுறையில் சிக்கலானதாக இருக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
- முழுமையான ஒப்பந்த தகவல்: நகை கடன் ஒப்பந்தங்களில், அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- 7 நாட்களில் நகை மீட்பு – இல்லையெனில் அபராதம்: வாடிக்கையாளர் கடனை திருப்பிச் செலுத்திய 7 நாட்களுக்குள், வங்கி அவருடைய நகையை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு தாமத நாளுக்கும் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள், தங்க நகை கடனுக்கு மேன்மையான கட்டுப்பாடுகளை வழங்கும் என்றாலும், சில விதிமுறைகள் நடைமுறையில் கடினமாக அமையும் என நிதி நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தங்க நகை கடனில் நம்பிக்கையும் பாதுகாப்பும் உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், இவற்றை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலாகும்.