பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறுக்கு நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதியான பாகிஸ்தான் காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது. இந்திய பாதுகாப்புப் படைகள் இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா, தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத எம்.பி. சம்பளத்தையும் இசை நிகழ்ச்சியில் இருந்து பெற்ற தொகையையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஹல்காம் தாக்குதலை எதிர்கொண்டு எல்லைகளில் துணிச்சலாக போராடும் நம் வீர ராணுவ வீரர்களின் செயல் பெருமைமிக்கது. இதனை மனதார வரவேற்கிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் இசையமைத்த முதல் சிம்பொனிக்கு ‘வீரமிக்க’ (Valiant) என பெயரிட்டிருந்தேன். இன்று அந்த வார்த்தைக்கு உண்மை அர்த்தம் கிடைத்திருக்கிறது. எனவே பெருமைமிக்க இந்தியனாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், என் ஒரு மாத சம்பளத்தையும் மற்றும் இசை நிகழ்ச்சியில் இருந்து பெற்ற தொகையையும் தேசிய பாதுகாப்பு நிதிக்குத் தருகிறேன். தீவிரவாதத்தை ஒழிக்கவும் எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் செயல்படும் ராணுவ வீரர்களுக்கு இது ஒரு சிறிய ஒளியாக அமையும் என நம்புகிறேன். ஜெய்ஹிந்த்!” என தெரிவித்துள்ளார்.