விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் கிராமத்தில், இஸ்லாமிய உறவின் முறை டிரஸ்ட் போர்டு சார்பில், மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையிலான ‘கல்வித் திருவிழா மற்றும் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா’ வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல, அது சமூக நல்லிணக்கத்தையும் மாற்றத்தையும் விதைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சமூக நல்லிணக்க நிகழ்ச்சிக்கு, இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். வீரசோழன் டிரஸ்ட் போர்டு நிர்வாகிகள், அனைத்து சமுதாயத் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். தனியார் அறக்கட்டளை நிறுவனர் ஹனிப் மற்றும் அகில இந்திய தேசிய லீக் துணைத் தலைவர் குத்தூஸ் ராஜா ஆகியோர் கல்வி மற்றும் சமூகப் பணி குறித்து வாழ்த்துரைகளை வழங்கினர்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து மாணவர்களுக்கு ஆசி வழங்கினர். கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் (இந்து மதம்), வீரசோழன் அரபிக் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் பாகவி (இஸ்லாம்) மற்றும் பேராயர் முனைவர் அந்தோணிசாமி சவரிமுத்து (கிறிஸ்தவம்) ஆகியோர் இணைந்து, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அது எவ்வாறு ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஆசி கூறினர்.
6 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சமூகத்தில் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் பஷீர் அகமது, ஹனிப், குத்தூஸ் ராஜா மற்றும் வீரசோழன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் உள்ளிட்ட 6 பேருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு: மத நல்லிணக்கக் கல்வித் திருவிழாவின் சிகர நிகழ்வாக, 2024–25 கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்த மாணவி நூர்ஜஹான் உள்ளிட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 57 மாணவ, மாணவிகளுக்குத் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் கேடயங்கள், பொன்னாடை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, சிறந்த முறையில் கல்விப் பணியாற்றிய வீரசோழன் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் ‘சிறந்த பள்ளிகளுக்கான விருது’ மற்றும் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த விழாவில் அனைத்து சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சியினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் ஆயிரக்கணக்கானோர் திரளாகக் கலந்து கொண்டனர். வீரசோழன் இஸ்லாமிய டிரஸ்ட் போர்டு நிர்வாகம் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்திருந்தது. இத்திருவிழா அப்பகுதியில் மதங்களைக் கடந்த ஒரு பெரும் சமூக எழுச்சியாகக் கருதப்பட்டது.













