புதுடில்லி : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு நிலைமை கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய ராணுவம், தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் எல்லை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தரஸ், ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எல்லை மாநிலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டு, பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பயணிகள் மீது தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், முன்னதாக வந்து சோதனைகளைச் சந்திக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் 3 மணி நேரத்திற்கு முன்பே வருமாறு விமான போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பார்வையாளர்களின் நுழைவு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம் என்று ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.