சென்னை : 7 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த பின்னர் தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னை அயனாவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரம் ஏகாங்கிபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பதும், சர்வீஸ் செய்வதும் ஆகிய தொழிலில் ஈடுபட்டிருந்த இவர், குடும்ப பிரச்னைகளால் கடந்த ஒரு ஆண்டாக மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரது 7 வயது மகள் ஸ்டெபி ரோஸ், கடந்த சில மாதங்களாக அவரது பாதுகாப்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 21) இரவு, சதீஷ்குமார் தனது மகளை அழைத்துக்கொண்டு ஆலந்தூர் பகுதியில் உள்ள விஜய் பார்க் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார்.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், தனது அக்கா கெசியாவுக்கு தொலைபேசியில் அழைத்து, “மகளை கொலை செய்துவிட்டேன்… நானும் உயிர் விடப்போகிறேன்” என தெரிவித்தார். இது கேட்டு அதிர்ந்த கெசியா, உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் ஹோட்டல் அலுவலர்களுடன் சேர்ந்து அறை எண் 213-ல் சென்ற கெசியா, உள்ளே சதீஷ்குமார் கத்தியால் மகளை கொலை செய்திருப்பதையும், தானும் கழுத்தை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருப்பதையும் பார்த்து திகைத்தார்.
உடனே சதீஷ்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், குழந்தையை தன்னுடன் அனுப்புமாறு மனைவி தொடர்ந்த மன அழுத்தம் தந்ததால் மன உளைச்சலால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது.
மேலும் சதீஷ்குமாரின் மனைவியிடமும் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.