தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இன்று காலை நிகழ்ந்த தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் பணியில் கனகவள்ளி என்ற ஊழியர் ஈடுபட்டு வந்தார். வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு வந்த அவர், உணவு தயார் செய்துக் கொண்டிருந்த போது, திடீரென சமையலறையில் இருந்த எல்.பி.ஜி. சிலிண்டரில் தீப்பற்றியது.
உணவு தயார் செய்துக் கொண்டிருந்த கனகவள்ளி, அதிர்ச்சியடைந்து அலறி ஓடி வெளியேறினார். இதற்கிடையில், தீப்பற்றிய ஒரு சிலிண்டரில் இருந்து அருகில் இருந்த மற்றொரு சிலிண்டர் மற்றும் உணவுப் பொருட்கள் மீது தீ பரவி எரிய தொடங்கியது.
உடனடியாக தகவலறிந்த விளாத்திகுளம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதில் பெரிய அளவிலான தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இரண்டு சிலிண்டர்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
சம்பவம் குறித்து மாசர்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசியல் காரணமாகவே தீப்பற்றி இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர் கனகவள்ளியின் சீரான செயல்பாடு மற்றும் விரைந்து செய்த தகவலால், பள்ளியில் பெரும் உயிரிழப்பு அல்லது சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் கைலாசபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.