மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா; திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்:-
மயிலாடுதுறை அருகே கூறைநாடு மாமரத்துமேடையில் உள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலின் கடந்த 19-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு, ஸ்ரீ தர்மர் பிறப்பு, ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பு, திரௌபதியம்மன் பிறப்பு, வில்வளைப்பு, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல், கர்ணமோட்சம் போன்ற சிறப்புமிக்க புராண நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்றது. விழாவின் 9 ஆம் நாள் முக்கிய நிகழ்வாக இன்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காவிரி ஆற்றங்கரையில் இருந்து பம்பை மேளம் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் கோவிலை ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.













