விழுப்புரம் : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்கும் சூழ்நிலை இல்லை எனக் கடுமையாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், கட்சித் தலைமையின் விஷயத்தில் பாசத்துக்கு இடமில்லை என்று உணர்ச்சிப் பூர்வமாக தெரிவித்தார்.
“என் மூச்சு காற்று இருக்கும் வரைக்கும் பா.ம.க. தலைவராக நான் தான் இருப்பேன். அன்புமணிக்கு அந்த பொறுப்பை கொடுக்க முடியாது” – ராமதாஸ்
தேர்தலுக்கு பின் அன்புமணிக்கு பதவி அளிப்பேன் என்று கூறியது தவறு எனவும், கட்சித் தலைமைக் குழுவினர் அதற்கு பெரும்பான்மை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்து…
அரசியலில் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்ற தமது ஆரம்பக் கொள்கையை நினைவுகூர்ந்த ராமதாஸ், “அந்த வாக்குறுதியை நான் காப்பாற்ற முடியாமல் போனேன்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது :
“தந்தை, தாயை மதிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். ஆனால் அன்புமணி மாறி விட்டார். மைக்கை தூக்கி அடிக்கிறார், பாட்டிலை தூக்கி தாயை அடிக்கிறார். இது மகிழ்ச்சியா?”
அன்புமணியைப் பார்த்தாலே ரத்த அழுத்தம் எகிறுகிறது எனவும், “தூக்க மாத்திரை போட்டு கூட தூங்க முடியாத நிலை உள்ளது” எனவும் அவர் சாடினார்.
தந்தையின் ஏமாற்றம்
மத்திய அமைச்சராக நியமித்து உலக அளவில் விருதுகளை வென்றவர் இன்று தந்தையின் மதிப்பை மறந்து விட்டதாகவும், கடந்த போராட்டங்கள் அனைத்தும் இன்றைக்கு வலியாக மாறியுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.
“96,000 கிராமங்களுக்கு நான் சென்று கட்சி வளர்த்தேன். இன்று அந்த கட்சியில் எனது தலைமையை கேள்விக்கூறுகிறார்கள். இது மிகுந்த வலி”
தீர்வாக ‘கேட்கிறேன்’ என்பது போதும்
இனிமேல் ஒரு தலைமை மாற்றத்திற்கும் வாய்ப்பில்லை எனவும், பாசத்தைவிட கட்சியின் நலனே முக்கியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரே தீர்வு – செயல் தலைவராக இருக்கிறேன், ஐயா சொல்வதை கேட்கிறேன் என்று கூறுவது தான்”