திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்காத ஆத்திரத்தில் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆவணங்களில் தீ வைத்துக் கொளுத்த முயன்ற நபரால் பரபரப்பு. நகர போலீசார் கைது செய்து விசாரணை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தளவாய்யிருப்பு வேலங்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் ராம்கி( 32 )என்பவர் தான் வசித்து வரும் நத்தம் புறம்போக்கு இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிய வருகிறது.
இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த இடம் வேறு ஒருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராம்கி இன்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஊழியர்கள் மீது ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார்.
அங்கு வேறு ஒரு பணி நிமித்தமாக நின்று கொண்டிருந்த நன்னிலம் அருகே உள்ள தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் விஜய் 45 என்பவர் ராம்கி பிடித்து தடுத்துள்ளார்.
அப்போது தவறி கீழே விழுந்த விஜய் தலையில் காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் உடனடியாக அலுவலக ஊழியர்கள் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட ராம்கியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூரில் பட்டா வழங்காத வருவாய்த்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மீதும் ஆவணங்களை கொளுத்த முயன்ற நபரால் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

















