மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியிடம் பெற்றோர் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் வந்து மனு:-
மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 2 ஆண்டுகளுக்குமுன் 12 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று பெற்றோர் பொதுமக்களுடன் வந்து மாவட்ட எஸ்.பி சினேஹா ப்ரியாவின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்தனர். அந்த மனுவில்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் உள்ள பிரபல தனியார் (அருண்பிரியா) மருத்துவமனையில் குத்தாலம் தாலுக்கா மேலமங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனது 12 வயது மகன் கிஷோருக்கு வயிற்று வலி காரணமாக கடந்த 29.1.2024 அன்று குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது மருத்துவமனையில் அலட்சியத்தாலும், மருத்துவர்கள் பாரதிதாசன், அபினவ், செல்வம், ரத்தினகுமார் ஆகியோரின் தவறான சிகிச்சையாலும் சிறுவன் கிஷோர் உயிரிழந்தார். சந்தேக மரணமாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாலசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பாரதிதாசன் , மற்றும் மயக்கமருந்து செலுத்திய அரசு மருத்துவமனை மருத்துவர் அபினவ் ஆகியோரை 6 மாதம் மெடிக்கல் கவுன்சிலில் இருந்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சஸ்பென்ட் செய்தது. மேலும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அபாரதம் விதித்தது. ஆனால் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் கடந்த 26.02.2026ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதாக கூறினர். 5 மாதங்களை கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டி உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.பி சினேஹா ப்ரியாவின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோருடன் வந்து பாலசுப்பரமணியன் அளித்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக மாவட்ட எஸ்பி உறுதி அளித்துள்ளதாக கூறிய பாலசுப்பரமணியன் தன் மகன் இறப்பில் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து சான்றுகளையும் பெறுவதற்கு இரண்டு வருடங்களாக போராடியதாகவும், நியாயம் பெறுவதற்காக போராட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், தகவல் அறியும் உரிமைசட்டத்தில் மாவட்ட மருத்துவதுறையினர் பதில் அளிக்காததால் சென்னை ஆணையர் அலுவலகம் சென்று பதில் அளிக்க உத்தரவு பெறவேண்டிய சூழல் உள்ளதாகவும் வேதனை தெரிவித்த பாலசுப்ரமணியன் காவல்துறை வழக்குப்பதிவு செய்தால் நானே அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வழங்க வேண்டிய நிலை உள்ளதாக குற்றம்சாட்டினார்.













