சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில், தவில் ஆசிரியர் ஹரிஹரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்குத் தவில் கலையைச் சிறப்பாகக் கற்றுக்கொடுத்து வருகிறார். இந்நிலையில், அவரைப் பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்திருப்பதை அறிந்த மாணவர்கள், இன்று காலை பள்ளிக்கு வந்ததும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.”
ஆசிரியர் ஹரிஹரனை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி, இசைப்பள்ளிக்கு முன்பாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாகப் பெற்றோர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் மாணவர்கள், ஆசிரியர் மீண்டும் வரும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனப் பிடிவாதமாக உள்ளனர்.”இலவசமாகக் கலைகளைக் கற்றுத் தரும் இந்த இசைப்பள்ளியில், இத்தகைய இடமாற்றங்கள் மாணவர்களின் கலைப் பயணத்தைப் பாதிக்கும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் இந்தத் தர்ணா போராட்டத்தால் சீர்காழி அரசு இசைப்பள்ளி வளாகத்தில் தற்போது பெரும் பரபரப்பு நீடிக்கிறது.”













