கோவையின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SNMV) வளாகத்தில், கல்லூரிகளுக்கு இடையேயான மாபெரும் கலாச்சாரத் திருவிழாவான ‘ரிகாலியா’ (Regalia) நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 105 கல்லூரிகளைச் சேர்ந்த 1,661 மாணவ, மாணவியர் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவின் ஒரு சிறப்பம்சமாக, கோவை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் பள்ளித் தலைமையாசிரியர்களின் கல்விப் பணியைப் போற்றும் வகையில், அவர்களுக்கு ‘கல்வி சிறப்பு விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் அஜய்கிருஷ்ணா வருகை தந்தார். அவர் தனது வசீகரிக்கும் குரலால் பாடல்களைப் பாடியும், மாணவர்களுடன் இணைந்து நடனமாடியும் அரங்கை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
மாணவர்களுக்காகக் குறும்படம் எடுத்தல், முக அலங்காரம் (Face Painting), பயன்பாடற்ற பொருட்களைக் கொண்டு பயனுள்ள பொருட்கள் உருவாக்குதல் (Wealth out of Waste), மணமகன்–மணப்பெண் அலங்காரம், ‘ரீல்ஸ்’ (Reels) தயாரிப்பு, இசைக்கருவி வாசித்தல், தனிநடனம், குழுநடனம், தனிப்பாடல் மற்றும் பிரம்மாண்டமான அலங்கார அணிவகுப்பு (Fashion Parade) எனப் பல்வேறு போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.
கல்லூரித் தலைவர் மஹாவீர் போத்ரா தலைமையுரை ஆற்ற, செயலாளர் சுனில்குமார் நஹாடா மாணவர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணி வரவேற்புரையாற்றினார். மேலாண்மைத் துறை இயக்குநர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் துணைச் செயலாளர் பாரத்குமார் ஜெகமணி, கருவூலர் அசோக் லூனியா, கோவை நலச்சங்க உறுப்பினர்கள் ஷீதல் மேத்தா, அபய் ஜெயின் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் திரண்டு இந்த மெகா கலைத்திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.















