ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சென்று அவர்களின் கனவுகளை கேட்கும் ‘உங்க கனவ சொல்லுங்க’என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, இத்திட்டத்திற்கு, தன்னார்வலர்கள் பயன்படுத்தும் தொகுப்பினை அவர்களுக்கு வழங்கினார். மேலும், பொதுமக்களிடம் நேரடியாக அவர்களின் கனவினை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், இந்த நாள் தனக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என குறிப்பிட்டார். தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையிலும், ஆளுநரின் முட்டுக்கட்டை செயல்பாடுகளையும் தாண்டி தமிழ்நாடு மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் மூலம் தொடர்ந்து 30 நாட்களுக்கு தன்னார்வலர்கள் மக்களை சந்திப்பார்கள். அவர்களிடம் வைக்கும் கோரிக்கைகளை ஆய்வு செய்து தமிழ்நாட்டிற்கான மாபெரும் கனவு திட்டத்தை அறிவிப்பேன் என்றும் முதலமைச்சர் கூறினார்.
இந்தியாவில் நம்பன் ஒன் மாநிலமாக இருக்கும் தமிழகம் தற்போது அடுத்த கட்ட கனவை காண வேண்டிய நேரம் இது என்றும், மக்களின் கோரிக்கைகளை நிச்சயம் திட்டங்களாக உருவாக்கி காட்டுவேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

















