‘மகாராஜா’ திரைப்படத்தின் மெகா வெற்றி தமிழ் சினிமாவின் பெருமையாக மட்டுமல்ல, இந்திய சினிமாவின் பெருமையாகவும் அமைந்தது. சீனாவில் கூட பிரமாண்டமாக வெளியான இப்படம் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் புகழ்பெற்ற ஹிந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவர், விஜய் சேதுபதி குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ படம் வந்த பிறகு எனக்கு பல தென்னிந்திய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் பலவற்றையும் நிராகரித்துவிட்டேன். எனினும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன” என ஆரம்பித்தார் அனுராக்.
அதனுடன் தொடர்ந்த அவர், “அந்த நேரத்தில் நான் ‘கென்னடி’ படம் போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருந்தேன். விஜய் சேதுபதியுடன் அடிக்கடி சந்திப்பு நடந்தது. அவர் ஒரு சிறப்பான கதைக்காக என்னை அணுக விரும்புவதாக கூறினார். ஆனால் நான் பிஸியாக இருப்பதால் முடியாது என சொன்னேன்” எனத் தெரிவித்தார்.
“பின் ஒரு சந்திப்பில் என் மகளுக்காக திருமணம் நடத்த விரும்புகிறேன். ஆனால் அதற்குத் தேவையான பணம் இல்லை என நான் கூறியபோது, ஒரு நொடியும் யோசிக்காமல் ‘நாங்கள் உதவுகிறோம்’ என்றார் விஜய் சேதுபதி” என நெகிழ்ந்துபோய் கூறியுள்ளார் அனுராக் கஷ்யப்.
இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகே ‘மகாராஜா’ படத்தில் நடிக்க அனுராக் சம்மதித்ததாகவும், விஜய் சேதுபதியின் மனிதநேயம் தான் அதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.
ஒரு நட்சத்திரம் என்று அழைக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு தவிர்க்க முடியாத வாய்ப்பு, தன்னலம் பார்க்காத மனம் ஆகியவை தேவையானவை என்பதை விஜய் சேதுபதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.