தரங்கம்பாடி அருகே நடுக்கரை மேலப்பாதியில் வெகு விமர்சையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நடுக்கரை மேலப்பாதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் தீமிதி உற்சவ விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, அம்மன் பிறப்பு, வில்வளைப்பு, திரௌபதி திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், பாஞ்சாலி சபதம், தபசு மரம் ஏறுதல், மாடுபிடி யுத்தம், அரவாணி யுத்தம், துரியோதனன் தொடை முறிவு படுகளம், திரௌபதி கூந்தல் முடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தினம் தோறும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. இதில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி வீதி உலாவாக மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர். ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து சக்தி கரகம் மற்றும் உற்சவமூர்த்தி வீதி உலா நடைபெற்றது

















