பெண்கள் பாதுகாப்பு குறித்து கல்லூரி இணையதளம், தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் இணையதளத்தை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சைபர் கிரைம் பிரிவு மற்றும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் இணைந்து “விழிப்புடன் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்” என்ற தலைப்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். கல்லூரியின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பாளர் அனிதா வரவேற்றுப் பேசினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகப்ரியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மயிலாடுதுறை சைபர் கிரைம் பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் சைபர் குற்றங்கள் குறித்து விளக்கி பேசினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மாணவிகள் அனைவரும் சைபர் கிரைம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதில் தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பாக வைப்பது, வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது, ஓடிபி மற்றும் வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிராமல் இருப்பது, மேலும் இணையத்தில் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைச்சொடுக்காமல் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், இணையவழி பணமோசடி அல்லது குற்றங்கள் நடந்தால் உடனடியாக 1930 என்ற 24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்ணை அழைக்கலாம். கல்லூரி இணையதளம்: www.dggacollege.edu.in, தேசிய சைபர் கிரைம் இணையதளம்: http://cybercrime.gov.in ஆகியவற்றை உடனே புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் பேராசிரியர்கள் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சைபர் கிரைம் பிரிவு மாணவ பிரதிநிதி சுசிமித்ரா தொகுத்து வழங்கினார். முடிவில், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நன்றி கூறினார்.















