திருவாரூரில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு, அரசு கொடுத்த மாற்று இடம் பட்டா செய்து கொடுக்காததால் அந்நியர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர் அருகே சிங்கிளாஞ்சேரி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில், ஒரு ரயில்வே மேம்பாலம் பாதி அளவில் அமைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தேவையான இடங்களில் நில உரிமையாளர்களிடமிருந்து நிலம் வாங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த ரயில்வே மேம்பாலத்திற்காக இடம் கொடுத்தவர்களுக்கு பணமும், மாற்று இடமும் தியானபுரம் பகுதியில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அரசு மாற்று இடம் கொடுத்த இடத்தில் பிற அந்நியர்கள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வதாகவும், அரசு முறைப்படி பட்டா செய்து கொடுக்கவில்லை எனவும் இது குறித்து பலமுறை திருவாரூர் வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

















