சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் சிறப்பு வாய்ந்த கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக ரூ.20 கோடி மதிப்பில் படகு நிறுத்தும் தள விரிவாக்க பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்- ஆய்வின் போது சுற்றுலாப் பயணிகளோடு சேர்ந்து வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற்று படகில் பயணம் செய்தார்.
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்து, திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் கடந்த 30.12.2024 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, தற்போது அனைத்து நாட்களிலும் கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், மற்றும் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற படகுப் போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் கன்னியாகுமரி பயணிகள் படகுத் துறையை (Jetty) விரிவாக்கம் செய்தல் பணிக்காக ரூ.20 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் படகு நிறுத்தும் தளம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதாப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வருகை தந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளோடு வரிசையில் நின்று பயண சீட்டு பெற்றுக் கொண்டு படகில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.













