2025ஆம் ஆண்டு ராகு – கேது பெயர்ச்சி இருவகை கணக்கீடுகளின் அடிப்படையில் வெவ்வேறு தேதிகளில் நடைபெறுகிறது. திருக்கணித முறையில் மே 18, 2025 அன்று ராகு பெயர்ச்சி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆனால் வாக்கிய முறையின் படி, ஏற்கனவே ஏப்ரல் 26, 2025 அன்று ராகு பெயர்ச்சி நிகழ்ந்துவிட்டது.
இந்த பெயர்ச்சியின் போது, சனி பகவான் ஆட்சி செய்யும் கும்ப ராசிக்கு ராகு நுழைகிறார்; சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசிக்கு கேது செல்கிறார். பொதுவாக ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்தால்தான் நன்மை தரும் என ஜோதிடக் கோட்பாடுகள் கூறுகின்றன.
ராசிப் பலன் குறித்து பரப்பப்படும் தவறான நம்பிக்கைகள்
பல ஜாதகப் பலன்களில், இந்த பெயர்ச்சியின் மூலம் “பணம் கொட்டும்”, “அதிர்ஷ்டம் சேரும்” போன்ற வகையில் மிகைப்படுத்தப்பட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் உண்மையில், கிரகப் பெயர்ச்சிகள் தனித்து நமக்கு நன்மையையோ தீமையையோ வழங்குவதில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் நடைபெறும் தசாபுக்தி, கிரக நிலைமைகள் மற்றும் பிற கிரகங்களின் இயக்கங்களுடன் இணைந்து தான் பலன்கள் விளையும்.
ராகு – கேதுவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
- இருவரும் நிழல் கிரகங்கள்.
- ஏனைய 7 கிரகங்களுடன் பகை மனப்பான்மையுடன் செயல்படுகின்றன.
- சொந்த வீடுகள் இல்லாதவை.
- இணைந்து இருக்கும் கிரகத்தின் தன்மையை எடுத்துக்கொண்டு பலனை வழங்குகின்றன.
- நம்மை விட்டுப் பிரியாத நிழல்போல், நமது கர்மங்களைப் பின்தொடர்கின்றன.
ஆன்மிக முறையில் என்ன செய்யலாம்?
- ராகு – கேது பெயர்ச்சி நாளில், உங்கள் குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் மனமார்ந்தோடு வழிபடுங்கள்.
- நாகதோஷம் அணுகாமல் இருப்பதற்காக, அஷ்ட நாகங்களின் (வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன்) பெயர்களை தினமும் உச்சரிப்பது நன்மை தரும். கீழ்கண்ட மந்திரத்தை தினமும் ஜபிக்கலாம்:
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே விஷ்ணு தல்பாய தீமஹி தந்நோ நாக ப்ரசோதயாத்
கிரகங்களுக்கும் கடவுள்களுக்கும் உள்ள ஆன்மிக தொடர்பு
- சிவபெருமான் தனது கழுத்தில் நாகத்தை ஆபரணமாக அணிந்து இருக்கிறார்.
- மகாவிஷ்ணு ஆதிசேஷனின் மேலே சயனித்திருக்கிறார்.
- ஆதிபராசக்தி நாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
- முருகனும், விநாயகரும் நாகத்தோடு தொடர்புடைய தெய்வங்கள்.
- சதுர்த்தி, பஞ்சமி திதிகள் “நாக சதுர்த்தி” மற்றும் “நாக பஞ்சமி” என்ற பெயர்களில் அனுசரிக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் நாக சக்திக்கான ஆன்மிக முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
தினசரி வழிபாட்டில் செய்யக்கூடிய சில சிறந்த செயல்கள்
- வியாழக்கிழமைகளில் கருட தரிசனம் மேற்கொள்ளுங்கள். கருட காயத்ரி மந்திரத்தை மாலை நேரத்தில் விளக்கேற்றி கூறுங்கள்:
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி தன்னோ கருட ப்ரசோதயாத்
- ஒருமுறை சிறுபுலியூருக்குச் சென்று, நாக பூஜை செய்யுங்கள்.
- ஸ்ரீபெரும்புதூரில் பெருமாளையும், ஆதிசேஷ அவதாரமான ஸ்ரீ ராமானுஜரையும் வணங்குங்கள். கீழ்கண்ட பாசுரத்தை தினசரி பூஜை அறையில் உச்சரிக்கலாம்: “
காரேய் கருணை இராமானுச, இக்
கடலிடத்தில்ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்குயிராய், அடியேற்கு இன்று தித்திக்குமே”
ராகு – கேது பெயர்ச்சி என்பது ஒரு இயற்கையான கிரக இயக்கம் மட்டுமே. அதில் மகிழ்ச்சியோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை. பக்தி, நேர்மை, நல்ல கர்மங்கள், தினசரி தியானம் மற்றும் மன அமைதி – இவை தான் நமக்குச் சிரமங்களைக் குறைத்து நன்மைகளை ஈர்க்கும்.