புதிய கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் 30% க்கும் குறைவான மதிப்பெண் பெற்றால் மாணவர்கள் தோல்வியாளர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் “8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி” என்ற பழைய நடைமுறை நீக்கப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுதொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“தி.மு.க. அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றாக எதிர்க்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். குறிப்பாக, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தோல்வியடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டி வரும். இது மன அழுத்தத்தையும், கல்வி தொடர முடியாமல் இடைநிறுத்தத்தையும் ஏற்படுத்தும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பெற்றோர்கள் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதின் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.