சென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நாளை நடைபெற உள்ள “சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு” குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், “மாநாட்டில் பங்கேற்கும் பா.ம.க. தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மாநாட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் அமைதியாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படக்கூடாது” என்று கூறினார்.
மேலும் அவர், “மாநாட்டிற்கு செல்லும் மற்றும் திரும்பும் போதும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டும். காவல்துறையின் ஆலோசனைகளை கவனமாக கேட்டு, அதன்படி நடக்க வேண்டும். சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். யாராவது சீண்டினாலும் தன்னடக்கத்துடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றால் தான் சமூகநீதிக்கான போராட்டம் வெற்றி பெறும்” எனவும் அவர் கூறினார்.