பெங்களூரு:
கர்நாடகாவின் கங்காவதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பாஜக எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டிக்கு, சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்பான வழக்கில் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக கர்நாடக சட்டமன்றம் அறிவித்துள்ளது.
ஜனார்த்தன ரெட்டி நிர்வகித்த ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம், இரும்புத் தாது சட்டவிரோதமாக வெட்டியெடுத்தது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. சமீபத்தில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் ரெட்டிக்கும் மற்ற மூன்று பேருக்கும் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தகுதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுதலையான பின்னரும் ஆறு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடக சட்டமன்றத்தில் ஒரு இடம் காலியாகியுள்ளது.
முன்னதாக பல்லாரியில் பாஜகவின் முக்கிய தலைவராக வலம் வந்த ரெட்டி, 2023 மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக “கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (KRPB)” என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன் மூலம் பாஜகவுடனான இருபது ஆண்டுகால ஒத்துழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கங்காவதி தொகுதியில் புதிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து மீண்டும் அதில் இணைந்தார்.