உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமவளங்களைப் பயன்படுத்தும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கும் முக்கிய ஒப்பந்தத்திற்கு, உக்ரைன் நாடாளுமன்றம் பெரும்பான்மையான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
நேட்டோவில் சேர்வதற்கான உக்ரைனின் விருப்பத்தை எதிர்த்து, ரஷ்யா 2022-ல் போரினை தொடங்கியது. தற்போது இந்த யுத்தம் மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன.
முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில், உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அதற்கான ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிக்கு பதிலாக, அந்நாட்டின் அரிய கனிமங்களை வழங்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை வைத்தது.
தொடக்கத்தில் இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பை தெரிவித்த உக்ரைன், தற்போது அமைதி நிலை திரும்பி, பொருளாதார வளர்ச்சி தேவைப்படும் நிலையில், ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 338 உறுப்பினர்கள் ஒப்புதலை தெரிவித்தனர். 226 வாக்குகள் இருந்தாலே மசோதா நிறைவேற முடியும் நிலையில், இது ஒரு மிகப் பெரிய ஆதரவாகும். எதிர்க்கட்சியினர் யாரும் இதற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் படி, உக்ரைனில் உள்ள அரிய கனிமவளங்கள் மற்றும் தாதுக்களை அமெரிக்கா பயன்படுத்தும் உரிமை பெறும். அதற்குப் பதிலாக, உக்ரைனின் மறுசீரமைப்பிற்காக அமெரிக்கா முதலீடு செய்யும். மேலும், கனிம விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தில் அமெரிக்கா ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.