சீர்காழி நகராட்சி கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள். சாலையை உடைத்து குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கழிவுநீர் கால்வாய் அருகே குழாய் அமைக்க வலியுறுத்தியும் பணியை தடுத்து நிறுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது நகராட்சி பகுதி கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் குழாய்கள் மூலம் கழிவு நீரை அப்புறப்படுத்தி அந்தந்த பகுதிகளில் தொட்டிகள் அமைத்து சுத்திகரிப்பு செய்து அதனை வடிகால் ஆற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 23 வது வார்டுக்கு உட்பட்ட திட்டை ரோடு பகுதியில் இன்று பணிகள் நடைபெற்ற பொழுது அப்பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், கழிவு நீர் கால்வாய் அருகே குழாய் அமைக்காமலும் பிரதான தார் சாலையை உடைத்து சாலையின் குறுக்கே குழாய் அமைக்க நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் பணியை துவங்கினர். பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு பிரதான சாலையாக அமைந்துள்ள சாலை உடைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். சாலையை அளவீடு செய்து சாலையின் ஏதேனும் ஒரு பகுதியில் தான் குழாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதனை அடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கண்டுகொள்ளாமல் பணிகளை உடனே செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே மும்மரம் காட்டினார். இதனால் பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளில் குழாய்கள் மூலம் கழிவுகள் வெளியேற்றும் இத்திட்டமானது பயனற்று கைவிடப்பட்டுள்ள நிலையில் சீர்காழி நகராட்சியில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவசரகதியில் பணியை முடிக்க ஒப்பந்ததாரர் தார்சாலையை உடைத்து குழாய் பதிக்க முயல்வதாக கடும் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பணியை தொடங்குவதற்கு பொதுமக்கள் அனுமதிக்காததால் வேறு வழியின்றி பணியாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.















