திருவாரூர் அருகே அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு இருந்ததால் அங்கன்வாடியில் பயிலக்கூடிய குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி.
திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி மொசக்குளம் பகுதியில் அங்கன்வாடி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள தெருவில் மற்றொரு வீட்டில் வாடகைக்கு இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.. இந்த நிலையில் இன்று அந்த அங்கன்வாடியில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி குஞ்சு கருவுடன் இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அங்கன்வாடியில் 35 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட 15 மாணவர்கள் மட்டுமே அங்கன்வாடி பள்ளி சென்று கல்வி பயின்று அங்கு உணவு அருந்துவார்கள். மற்ற 20 குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோர்களிடம் முட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். வாரம் ஒன்றுக்கு மூன்று முட்டைகள் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் அங்கன்வாடியில் ஒரு பெற்றோர் முட்டை வாங்கி அதனை தன்னுடைய குழந்தைக்கு பயன்படுத்தி சென்ற பொழுது, முட்டையின் தரம் கண்டு சந்தேகத்துடன் அதனை உடைத்துப் பார்க்கையில் அதனுள்ளே வளர்ச்சியடைந்த கோழி குஞ்சு கரு இருந்தது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்கள்

















