புதுடெல்லி – இந்தியாவின் நிதி வரலாற்றில் மிகப்பெரிய முதலீட்டு மோசடியாக கருதப்படும் பிஏசிஎல் மோசடி (PACL Scam) வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் 5.5 கோடி மக்கள் ஏமாற்றப்பட்டு, ₹49,100 கோடிக்கு மேல் நிதி மோசடி நடந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சிட் ஃபண்ட் அறிமுகம் முதல் மோசடி வரை
பஞ்சாபைச் சேர்ந்த பால் வியாபாரி நிர்மல் சிங் பாங்கோ, 1970களில் கொல்கத்தாவில் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை செய்ததைத் தொடர்ந்து, முதலீட்டு திட்டங்களைப் பற்றிய அனுபவத்தைப் பெற்றார். இந்த அனுபவத்தின் அடிப்படையில், 1980களில் PAGF என்ற நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் இது PACL (Pearls Agrotech Corporation Limited) என பெயர் மாற்றம் பெற்றது.
வேளாண் நில முதலீடு என்ற பெயரில் மக்கள் ஏமாற்றம்
PACL நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்களில், மக்கள் பங்கீடு செய்யும் பணத்தில் வேளாண் நிலங்கள் வழங்கப்படும் என்றும், இல்லையெனில் உயர்ந்த வட்டியுடன் பணத்தை திருப்பி தரப்படும் என்றும் கூறப்பட்டது. இதை நம்பிய கிராமப்புற மக்களும் நகர மக்களும் தங்கள் சேமிப்புகளை முதலீடு செய்தனர்.
ஊக்கத்தொகை முறையில் ஏமாற்றம்
தங்களுடன் பிறரை இணைக்கும்படி வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனால் உறவினர்கள், நண்பர்களையும் பலர் இந்தத் திட்டத்தில் சேர்த்தனர். ஆனால், நிலங்களோ பணமோ திருப்பி தரப்படாமல், பிஏசிஎல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
வெளிநாடுகளில் சொத்துகள் – ஹவாலா வழியாக பணம் மாற்றம்
மக்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகை வெளிநாட்டு ஷெல் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. ஹவாலா நெட்வொர்க் மூலம் பணம் பல்வேறு கைகளுக்குச் சென்றது. ஏஜெண்டுகள் கிராமங்களில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டனர்.
1998ஆம் ஆண்டு, பிஏசிஎல் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல என்பதை செபி கண்டறிந்தது. தொடர்ந்து நடந்த வழக்குகளில், உச்சநீதிமன்றம் பிஏசிஎலை செபி விதிமுறைகளுக்குட்பட்ட நிறுவனமாக அறிவித்தது. அதன் பேரில், ₹49,100 கோடி திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாங்கோவுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல்
CBI மற்றும் Enforcement Directorate இணைந்து பாங்கோவின் சொத்துக்களை பறிமுதல் செய்தன. 1300-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கில் கோடிகளுக்கு சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
முற்றுப் புள்ளி – ஆனால் தீராத பாதிப்புகள்
இந்த மோசடியில் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க செபி தனி இணையதளப் பதிவு அமைத்தது. பாங்கோ, 2024ஆம் ஆண்டு சிறையிலேயே உயிரிழந்தார். ஆனால் மக்கள் பணத்தை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை.