செம்பனார்கோவில் அருகே தவெக கொடி பொருத்திய கார் வேகமாக வந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்து , மது போதையில் இருந்த இளைஞர்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு மற்றொரு காரி தப்பியோட்டம் , எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறையினர் :-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பூம்புகார் டு மயிலாடுதுறை பிரதான சாலையில் நள்ளிரவு தவெக கொடி பொருத்திய வாகனம் வேகமாக அவ்ழியாக வந்துள்ளது. அப்போது கீழையூர் பகுதியில் சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தின் மீது கார் மோதியதில் இரண்டு துண்டுகளாக கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காரில் இருந்த நபர்களை மீட்டனர். சிறு காயங்கள் மட்டுமே அவர்களுக்கு ஏற்பட்ட நிலையில் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அப்பகுதியை சேர்ந்த சிலர் விபத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது காரில் இருந்து இறங்கியவர்கள் தவெக கொடியை வேகவேகமாக அப்புறப்படுத்தியதுடன் வீடியோ எடுத்த இளைஞருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேகவேகமாக விபத்து ஏற்பட்ட காரில் இருந்த தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு மற்றொரு காரை வரவழைத்து அனைவரும் தப்பிச்சென்றனர். இந்த விபத்து தொடர்பாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கம்பத்தை சீர் செய்வதற்கு இளைஞர்கள் மின்வாரியத்திற்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தவெக கொடி பொருத்திய கார் விபத்துக்குள்ளான அந்த இளைஞர்கள் மீது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

















